Saturday, 10 September 2011

சிறுதானியங்களின் சிறப்பு

பசுமைப் புரட்சியால் உற்பத்தியைப் பெருக்கினாலும், பாரம்பரிய விவசாயத்தைக் கைவிட்டதால், சிறுதானியங்களின் உற்பத்தி குறைந்துள்ளது. 

சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி ஆகிய சிறுதானியங்கள் ஊட்டச்சத்து மிக்க தானியங்களாக நிரூபிக்கப்பட்டாலும், பசுமைப் புரட்சிக்குப் பின் மக்கள் மனதிலிருந்து அகற்றி விட்டோம்.

இந்தத் தலைமுறைக் குழந்தைகளிடம் தானியங்கள் பற்றிக் கேட்டால் அரிசி, கோதுமை தவிர மற்ற தானியங்களைப் பற்றி தெரிவதில்லை என்பதைவிட நாம் அவற்றை  அவர்களுக்குக் காண்பிக்கவில்லை என்பதே உண்மை.  ÷மேலும் நாகரிகத்தின் சின்னமாக அவை அடையாளப்படுத்தப்படுவதில்லை. மாறாக அவற்றை உபயோகிப்பவர்களை தாழ்வாக எண்ணக்கூடிய மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள். விளைவு பல்வேறு நோய்களில் சிக்கி நிறைய செலவு செய்கிறோம்.

தற்போது மக்களை நோய்கள் அதிகம் தாக்குவதால் குறிப்பாக நீரிழிவு நோய் கண்டவர்கள் கேழ்வரகை (ராகி) அதிகம் நாடுகிறார்கள். பெரும்பாலான சிறு நகரங்களில் கேழ்வரகு கூழ் விற்பனைக்கு வந்துவிட்டது.

நவநாகரீக உடையில் வருபவர்கள்கூட அதை வாங்கிக் குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ÷கோடைக்காலத்தில் குளிர்ச்சி என்றாலும், உடல்நலத்துக்கு முக்கிய பாதுகாப்பாகவும் விளங்குவதால் அதை பெரும்பாலானோர் விரும்புகின்றனர். பெரும்பாலான ஓட்டல்களில் ராகி தோசை, ராகி அடை விற்பனை செய்யப் படுகிறது. அவைகளுக்கு கடும் கிராக்கியும் இருக்கிறது. நட்சத்திர விடுதிகளில்கூட கேழ்வரகு களி அமோகமாக விற்பனை செய்யப்படுகிறது.

பொதுவாக தாய்பால் குழந்தைகளுக்குக் கிடைக்காமல் போகும்போது கேழ்வரகு கூழ் பரிந்துரை செய்யப்படுவதும், 40 வயதுக்குப் பின் உடல் சீர்கெடும் போது மருத்துவர்கள் பரிந்துரை செய்வதும் இந்த சிறுதானியங்களைத்தான்.  இன்றைய விவசாய தற்கொலைகளுக்கு அடிப்படை சிறுதானியங்கள் உற்பத்தியை தவிர்த்து வணிகப் பயிர்களுக்கு மாறி, சந்தைப்படுத்துவதில் சிக்கல், அதிக நீர்த்தேவை, விலைமிக்க ரசாயன இடுபொருள்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் போன்றவைகளுக்கு செலவு செய்ய முடியாமல் போனதுதான் காரணம் என்றால் அது மிகையில்லை.

சிறப்பு அம்சங்கள்: இவை சத்துமிக்க தானியங்கள் மட்டுமின்றி மிகக் குறைந்த நீரே போதுமானது. மழைநீரே போதும், நீர் பாசனம் தேவையில்லை. வளமிக்க மண் தேவையில்லை. ரசாயன் உரம் தேவையில்லை, பூச்சித் தாக்குதல் குறைவு, எனவே பூச்சுக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தவேண்டிய அவசியமுமில்லை.

ரசாயன உரம் உபயோகிக்கத் தேவையில்லை. பூச்சித் தாக்குதல் குறைவு. பல தானிய விதைப்பால் சுற்றுச்சூழல் வளமையாக்கப்படுகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு உபயோகங்கள் இதில் உள்ளன.

எனவே கோடைக்காலத்தில் நீர் தேவையைக் கருத்தில் கொண்டும், மண்வளம் இல்லாத விவசாயிகள்கூட இந்தப் பயிர்களின் உற்பத்தியை உயர்த்திக் கொள்ளலாம் என்பதே இயற்கை வேளாண்மை ஆர்வலர்களின் கருத்து.

No comments:

Post a Comment